படையினரை பயன்படுத்தி புதையல் தோண்டியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராணுவப் படையினரை பயன்படுத்தி நாடு முழுவதிலும் காணப்படும் பெறுமதியான புதையல் பொருட்களை வெடிபொருட்களை வைத்து வெடித்து, அவற்றில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை குறித்து நிதி மோசடிப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு என்பன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சர் ஒருவர் படைவீரர்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டி பெறுமதியான பொருட்களை எடுத்துச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் ஏனைய இடங்களில் பாதுகாப்பாக புதைகப்பட்டுள்ள புதையல்களை தோண்டி எடுத்து அவற்றில் காணப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட சிலர் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியனவற்றில் அமைந்துள்ள புராதன இடங்களில் பல நூறு ஆண்டுகளாக பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த புதையல்கள் படையினரைக் கொண்டு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கற்களுக்குள் புதைக்கப்பட்ட இந்த புதையல்கள் வீதிகளை அமைப்பதற்கு கற்களை எடுக்கும் போர்வையில் படையினரை பயன்படுத்தி கற்களை உடைத்து அவற்றில் காணப்பட்ட புதையல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முறைப்பாடு செய்துள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.