இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரதியமைச்சர் பிரியங்கர ஜயரத்ன விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் பெருமளவான ஊழல்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் மஹிந்த ஆட்சியில் விமான சேவைகள் பிரதியமைச்சராக இருந்த பிரியங்கர ஜயரத்ன , தனது தனிப்பட்ட வாகனங்களுக்கு விமான சேவைகள் நிறுவனத்தில் இருந்து எரிபொருள் பெற்றுக் கொண்டமை, அவரது இல்லத்தில் நடைபெற்ற விருந்து வைபவங்களுக்கு விமான சேவைகள் நிறுவனத்திடமிருந்து உணவு, பானங்களை தருவித்துக் கொண்டமை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக விமான சேவைகள் நிறுவனத்தின் நிதி மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பிரதியமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிடம் நேற்று விசாரணை நடத்தியுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சட்டம், ஒழுங்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சராக இவர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.