கடந்த 3ஆம் திகதி இ.போ.ச. பேருந்தும் தனியார் பேருந்தும் பலாலி வீதியில் போட்டி போட்டு ஓடியதில் தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து திருநெல்வேலி சந்திக்கு அருகில் எதிரே வந்த முச்சகரவண்டியை மோதித் தள்ளியது.
அதில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மகன் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
அதில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்ற பார்த்தீபன் சுவஸ்தீகன் (வயது 6) எனும் மாணவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளான்.
குறித்த விபத்தினால் முச்சக்கர வண்டி மற்றும் ஐந்து மோட்டார் சைக்கிள், என்பன கடும் சேதத்திற்கு உள்ளாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மாணவன் உயிரிழந்ததை அடுத்து. “இனி ஒரு விதி செய்வோம்” என மாணவன் பெயரில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
குறித்த துண்டுப்பிரசுரத்தில், அன்பான வாகன சாரதிகளுக்கு ஓர் அறிவுபூர்வமான வேண்டுகோள், வாகனம் செலுத்தும் போது கைத்தொலைபேசியை துண்டித்து, மது அருந்துவதை விடுத்து, போட்டியை விடுத்து, வேகத்தை குறைத்து வாகனத்தை செலுத்துவோமே,
நீங்கள் விதியை மீறியதால் என் விதி முடிந்தது. சாதிக்க வேண்டிய என்னை சாகடித்து விட்டீர்கள்.நானும் உங்கள் குழந்தை தானே, உங்கள் பசிக்கு பலியானது நானே கடைசி ஆளாக இருக்கட்டும். இப்படிக்கு, இனி உங்களோடு காற்றாக வாழும் சுபஸ்தீகன் என அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.