இளம் பெண்களை பலவந்தமாக தடுத்து வைத்து, அவர்களை விபச்சார தொழிலில் ஈடுப்படுத்திய மோசடி கும்பலை கண்டி காவற்துறையினர் முற்றுகையிட்டனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணமல் போன 17 வயதான பெண், கண்டி பிரதேசத்தில் உள்ள விபச்சார விடுதியொன்றில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என நபரொருவர் கண்டி குழந்தைகள் மற்றும் பெண்கள் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த தகவலையடுத்து கண்டி காவற்துறையினர் குறித்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, இரகசிய அறையில் தடுத்து வைக்கப்பட்ட இளம் பெண்ணுடன், விபச்சார தொழில் ஈடுபட்ட 30 வயதான பெண் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு இருந்த வாடிக்கையாளர் இருவரையும், விபச்சார விடுதியின் முகாமையாளரையும் காவற்துறையினர் கைது செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இளம் பெண்ணிடம் விசாரணை செய்த போது, தனக்கு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இங்கு அழைத்து வந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் அங்குவுள்ள சிலர் குறித்த பெண்ணை விபச்சாரத்தில் பலவந்தமாக ஈடுபடுத்தி அதிக பணங்களை வருமானமாக பெற்றுகொண்டதாக அப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் தனது நிலையை எடுத்து கூறியுள்ளார். பின்னர் குறித்த வாடிக்கையாளர் மூலம் தனது தந்தைக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பின்னரே காவற்துறையினர் குறித்த இடத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கு முன்னரும் குறித்த இடத்தில் விபச்சாரம் இடம் பெற்றதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் கண்டி காவற்துறையினர் தெரிவித்தனர்.