இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 2017ம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு அமர்வுகளிலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட மாட்டாது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் இதனை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அதன்போது இதுகுறித்த விசாரணை அறிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.