அண்மைக்காலமாக வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள், ஊழல் மோசடிகள் என்பன தொடர்பாக பாரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. வடக்கு முதலமைச்சருக்கு முதுகு சொறியும் ஒரு தரப்பினரும், அவைத்தலைவருக்கு முதுகு சொறியும் மற்றொரு தரப்பினருமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவர்களது வடமாகாணசபை நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடைபெறும் பிரச்சினைகளுக்கு உள்ளுக்குள்ளேயே தீர்வினைக்காண்பதை விடுத்து அதனை வெளியில் கொண்டுசெல்லும் நிலைக்கு வடமாகாணசபை தள்ளப்பட்டுள்ளது. ‘கோவணம் கட்டினாலும் கொள்கை மாறக்கூடாது’ என்பதன் அடிப்படையில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் பயணிக்கிறார் என பலர் எண்ணக்கூடும். அதேபோன்று வடமாகாணசபையின் அவைத்தலைவரும், வடமாகாணசபையின் அமைச்சர்களும் பக்கசார்பாக, தமது சுயநல அரசியலையும், தமது ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கோடும், பணத்தினை சம்பாதிப்பதிலும் குறிக்கோளாகவிருப்பதாக ஏனைய மாகாணசபையின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஐங்கரநேசன், டெனீஸ்வரன், குருகுலராசா, சத்தியலிங்கம் போன்றோர் பல கோடிகளை தமக்கென சேகரித்துக்கொண்டமை தெரியவந்துள்ளது. ஆனாலும் இதனை சட்டத்திற்கு முன்னால் முன்னிலைப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் இதற்கான ஆதாரங்கள் தற்போது திரட்டப்படுகின்றது. அதனொரு கட்டமாக விவசாயத்துறையின் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் 4கோடி ரூபாவை தனது மகன் அவுஸ்திரேலியாவில் படிப்பதற்காகக் கொடுத்துள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போதைய வடமாகாணசபை இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் வடக்கின் முதல்வர் அவர்கள் தமிழர் பேரவையின் இணைத்தலைவராக செயற்படுவதும் மறுபக்கத்தில் மற்றொரு பிரச்சினையினைத் தோற்றுவித்துள்ளது. இதற்கான பரிகாரமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு ஐக்கியத்திற்குள் செயற்படும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தவறினால் வடமாகாணசபையினது அரசியல் நடவடிக்கைகளை நேரடியாக மத்திய அரசு கையாளும் நிலை உருவாகும். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது.