துறைநீலாவணையில் தகவல் சேகரிக்கச் சென்ற உத்தியோகத்தர் மீது தாக்குதல்

258
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் கடமையில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தரை மூவர் இணைந்து தாக்கியதில், குறித்த உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் தம்பிப்பிள்ளை விநாயகமூர்த்தி, சக உத்தியோகத்தர்களுடன் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தில் கடமை நிமித்தம் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தால் வழங்கப்பட்ட குடும்ப நிலவரம் குறித்த விண்ணப்பத்தை வீடு வீடாகச் சென்று பூர்த்திசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வீதியில் நின்ற ஒருவர் பொல்லுடன் உலாவியபடி சம்பந்தப்படட உத்தியோகத்தரை நிந்தித்த வண்ணம் முறையற்ற விதத்தில் அச்சம் ஊட்டிக் கொண்டிருந்துள்ளார்.

உத்தியோகத்தர், சம்பந்தப்படடவரின் அருகிலுள்ள வீட்டில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

குறித்த உத்தியோகத்தர் அச்சம் காரணமாக அந்த வீட்டிலேயே நீண்ட நேரம் இருந்து கொண்டு அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்கு விடயம் பற்றி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பக்கத்து பிரதேச கிராம உத்தியோகத்தர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்டவருடன் சமாதானம் பேசி உத்தியோகத்தரை விட்டிலிருந்து வீதிக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது அவர் முன்னிலையில், ஏற்கனவே தயாராக வீதியில் நின்றவர் மேலும் இருவருடன் சேர்ந்து சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கியள்ளார்.

இது குறித்த தகல்கள் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினத்திற்கும் வாழ்வின் எழுச்சி அதிகாரி வரதராஜனுக்கும் அறிவிக்கப்படதை தொடர்ந்து,

பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசார் மாலை 5 மணியளவில் சந்தேகத்தின் பெயரில் துறைநீலாவணையில் வைத்து தந்தை மகன் உட்பட மேலும் ஒருவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்படட உத்தியோகத்தர் கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

SHARE