
இன்று காதலர் தினம்…! ஆடையின் நிறம் என்ன?
காதல் மின்னலை போன்றது. அது எப்போது வரும்? என்று யாருக்கும் தெரியாது. எந்தவித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை இந்த மூன்றும் சங்கமிக்கும் ஒரு புள்ளியே காதல்.
‘‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து’’
எனும் குறளே அதற்கு சான்றாகும். ‘சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகிற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்’, என்பதே இந்த திருக்குறளின் விளக்கமாகும். இப்படி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காதலின் சிறப்பு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
காதல் வருவதும், வந்தபின் அந்த காதலை யாருக்கும் சொல்லாமல் வளர்ப்பதும் ஒரு சுகமான சுமை தான். அதிலும் காதல் கைகூடிவிட்டால் போதும் உலகத்தையே வென்று விட்ட திருப்தி காதலர்களுக்கு ஏற்படும். மொத்தத்தில் காதல் மனிதனுக்கு ஓர் ‘உற்சாக டானிக்’.
அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என்று உள்ளது போல், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தின கொண்டாட்டத்தின் பின்னணி தான் என்ன? என்று பார்த்தால் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கதை தான் காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது.
இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன். இவர் அந்த நாட்டில் ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும் மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் தள்ளியது. என்றாலும் பாதிரியார் வாலண்டைனுக்கு காதலர்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. பாதிரியார் வாலண்டைன் மறைந்தாலும், அவரது நினைவு தினமான பிப்ரவரி 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பள்ளி-கல்லூரி காலத்தில் தோன்றும் காதலில் ஈர்ப்பு மட்டுமே பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பக்குவமடைந்த வயதில் தோன்றும் காதலே வாழ்க்கையை யோசிக்க வைக்கிறது.
முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலர் தின கொண்டாட்டம் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கு பரிசுப்பொருட்கள், இனிப்புகள், ஆடை-அணிகலன்கள், வாழ்த்து அட்டைகள் என தங்களால் முடிந்தவற்றை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
காதலில் விழுந்து, தன் மனம் கவர்ந்த காதலியை மனைவியாக அடைகிறவன் வெற்றியாளனாகவே பார்க்கப்படுகிறான். அந்த காதலும் வெற்றியடைந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால் வாழ்கிற வாழ்க்கையில் தான் அந்த காதலின் நிஜ முகம் தெரியவருகிறது. ஆடம்பர கேளிக்கைகளை தவிர்த்து உள்ள புரிதலோடு காதலர் தினத்தை கொண்டாடினால் வாழ்வில் என்றும் சந்தோஷம் தென்றலாய் வீசும்…
ஆடையின் நிறம் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று என்ன நிறத்தில் உடை அணிகிறோம்? என்பதற்கு இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்ததை வைத்திருப்பார்கள். இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் காதலர் தின உடைக்கான விளக்கம் வருமாறு:-
பச்சை நிற உடை: – எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
ரோஸ் நிற உடை: – இப்போது தான் காதலை ஏற்றேன்.
நீல நிற உடை: – இன்னும் காதலில் விழவில்லை.
மஞ்சள் நிற உடை: – காதல் தோல்வி.
கருப்பு நிற உடை :- காதல் நிராகரிக்கப்பட்டது.
ஆரஞ்சு நிற உடை: – நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.
சிவப்பு நிற உடை: – எனக்கு விருப்பம் இல்லை.
சாம்பல் கலர் உடை: – எனக்கு காதல் வராது. வெறுக்கிறேன்.
வெள்ளை நிற உடை: – ஏற்கனவே காதலிக்கிறேன்.
கருத்துகள்