அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆண்டனின் ஸ்கேலியா ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
இதையடுத்து, அந்தப் பதவிக்கு பாத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீதிபதிக்கான பட்டியலிலும் இவரது பெயரே முன்னணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் மாகாண சர்க்யூட் நீதிமன்ற நீதிபதிகளிலிருந்தே உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்த முறையை ஒபாமா பின்பற்றினால் இந்தியாவில் பிறந்து, தமிழகத்தைப் பூர்விமாகக் கொண்டவரான ஸ்ரீநிவாசனின் பெயரும் இடம்பெறும். முன்னதாக, மறைந்த நீதிபதி ஸ்கேலியாவுக்கு பிறகு அந்தப் பதவிக்கு அடுத்த நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டியது எனது கடமையாகும் என்று ஒபாமா தெரிவித்திருந்தார். இவரது தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆவார். தாயார் சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் கடந்த 1960-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற ஸ்ரீநிவாசன், வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு, கொலம்பியா மாகாண சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக இவரை ஒபாமா நியமித்தார். அமெரிக்காவில் ஓர்பாலின திருமணத்துக்கு ஆதரவாகவும் இவர் குரல் கொடுத்துவந்துள்ளார். இவரை நீதிபதியாக்கவே ஒபாமா விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் நீதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்டால். உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் அமெரிக்க இந்தியர் என்ற சாதனைக்கு ஸ்ரீகாந்த் சொந்தக்காரர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. |