இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்கள் காரணமாக 50 சதவீத மனிதர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் இயந்திரமயமாகி கொண்டுவருகிறது.
விரைவில் மனிதர்களின் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்களால் 50 சதவித மக்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோஷி வார்தி என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது, அனைத்து வேலைகளையும் மனிதர்களை விட சிறப்பாக இயந்திரங்கள் செய்யும் காலக்கட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கோம். அதேவேளையில் எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்தால், மனிதர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை முன்நிறுத்த சமூகத்திடம் நான் வேண்டுகிறேன். வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மனிதர்களின் அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் கைப்பற்றிவிடும். இதனால் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வேலை இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் அத்தகைய சூழ்நிலையை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இதே கூற்றை புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹோக்கிங்கும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |