ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் குறுகிய கால பதவி நீடிப்பை வழங்குவார் – பரணகம குழு நம்பிக்கை

256
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை குறுகிய கால அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடிப்பார் எனத் தாம் நம்புகின்றோம் என்று ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பரணகம தலைமையிலான குழுவினரால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றுவரை பதவிக்கால நீடிப்புக்கான ஜனாதிபதி மைத்திரிபாலவின் அனுமதி கிடைக்கவில்லை.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு ஜேர்மனி நோக்கியும் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்ரியா நோக்கியும் நேற்று திங்கட்கிழமை முற்பகல் பயணமாகிவிட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பியவுடன் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை குறுகிய கால அடிப்படையில் நீடிப்பார் எனத் தாம் நம்புகின்றோம் என்று காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

maxwell-paranagama-4747n4d

 

SHARE