பிரித்தானிய நாட்டில் 3 வயது மகனை காரை ஏற்றி கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்தில் உள்ள Watton என்ற நகரில் Stephen மற்றும் Lyndsay Turner என்ற பெற்றோர் லியாம் எனப்பெயருடைய 3 வயது சிறுவனுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் அவர்கள் Citroen C4 என்ற மொடலை சேர்ந்த கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளனர். ஆனால், இந்த ரக காரை தாயார் இதற்கு முன்பு ஓட்டியது இல்லை. இதனை தொடர்ந்து, ’காரை ஓட்ட எனக்கு கற்றுக்கொடுங்கள்’ என தனது கணவரிடம் அவர் கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த கணவர், வீட்டிற்கு வெளியே வந்தவுடன் ‘முதலில் காரில் அமர்ந்து சிறிது தூரம் ஓட்டிக்காட்டு’ என மனைவியிடம் தெரிவித்துள்ளார். மனைவியும் காரில் அமர்ந்து காரை இயக்கியுள்ளார். இந்த சமயத்தில் வெளியே அவர்களது 3 வயது மகனான லியாம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். இதனை அறியாமல் தாயார் காரை இயக்கியவுடன், அது அதிவேகத்தில் முன்னோக்கி பாய்ந்துள்ளது. காரின் வேகத்தை கண்டு அஞ்சிய தாயாருக்கு அந்த சூழலில் பிரேக் எது என தெரியாமல் காரை கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளார். எதிரே மகன் விளையாடிக்கொண்டு இருந்ததை கண்ட தந்தை ‘காரை நிறுத்து……காரை நிறுத்து’ என உரக்க கத்தியுள்ளார். ஆனால், அனைத்தும் காலம் கடந்து சென்றுள்ளது. மகனின் மீது பாய்ந்த அந்த கார அவனது தலையை மிகவும் சேதப்படுத்தியது. கார் ஓரிடத்தில் மோதி நின்றதும், உயிருக்கு துடித்துக்கொண்டு இருந்த மகனை வாரி அணைத்துக்கொண்டு கண்ணீருடன் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஆனால், மகனின் தலைப்பகுதி அதிகம் சேதமடைந்துள்ளதால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். கடந்தாண்டு யூன் மாதம் 7ம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பேசியபோது, ‘இந்த மரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. எதிர்பாராத தருணத்தில் ஒரு விபத்தின் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது நிரூபனம் ஆகியுள்ளது. மகனை இழந்து தவித்து வரும் பெற்றோருக்கு தங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அதே சமயம், தாயாரின் இந்த செயலுக்கு எந்த தண்டனையும் வழங்க தேவையில்லை என நீதிமன்றம் கருதுவதாக’ தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. |