நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்டன் யோசித ராஜபக்சவை பார்ப்பதற்கு சக கடற்படை வீரர்களும் சென்றுள்ளனர். இது வழமைக்கு மாறானதென அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 14ம் திகதி தியகமவில் நடைபெற்ற இராணுவத்திற்கும் கடற்படைக்குமிடையிலான றகர் விளையாட்டுப் போட்டியின் போது நான்கு கடற்படை வீரர்கள் வை 007 என்ற இலக்கத்தை கொண்ட பட்டிகளை கையில் கட்டிக் கொண்டு விளையாடியுள்ளனர்.
சிறையி்ல் இருக்கும் யோஷித ராஜபக்சவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அவ்வாறு கைப்பட்டிகளை அணிந்து கொண்டு விளையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நான்கு பேரும் றகர் போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
யோஷித ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதனால் அவருக்கு கடற்படையில் சேர்வதற்கும் அப்படையில் விசேடமாக இடத்தைப் பெற்றுக் கொள்ளவும் விரும்பிய சேவையை மேற்கொள்ளவும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவும் வரப்பிரசாதங்களையும், சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தார். சி.எஸ்.என். என்ற தனியார் தொலைக்காட்சியின் அங்கத்தவராக இருந்துள்ளார்.
அதனை நடத்துவதற்கான மில்லியன் கணக்கான ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு கணக்குக் காட்ட முடியாததால் நிதி மோசடி குற்றச்சாட்டில் அவரும் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால் யோஷித மீது அனுதாபம் கொண்டவர்கள் இருக்கக்கூடும். அது மனித சுபாவம். ஆனால் அவ்வனுதாபத்தை கடற்படை வீரர்கள் அவர்களின் பதவி நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்துவதும், ஒத்துழைப்பை காட்டுவதும் அவர்கள் கட்சி அரசியல் சார்பற்றவர்களாக அரசியலைக் கடந்து இலங்கை அரசிற்கு விசுவாசமாக பக்கச்சார்பற்று செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை சிதைப்பதாக இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் அதிகார நிலையே அவர்களது ஆதரவாளர்கள் குடும்பத்தினர் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செல்வதற்கு வழிவகுத்தது.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நிதிக்குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தைக் கொண்டவையாகும். அவ்வாறான குற்றங்களை புரிந்ததான சந்தேக நபர்களுக்கு கடற்படை வீரர்கள் ஒத்துழைப்பை காட்டுவதென்பது பாதுகாப்புப்படை அரசியல் கட்சி செல்வாக்குக்கு உட்பட்டுவிட்டதா என சந்தேகிக்க வைக்கிறது.
பாதுகாப்புப் படையினர், பொலிஸார், நீதித்துறையினர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், உயர் அரச அதிகாரிகளுக்கு தொழிற்சங்க உரிமையோ, கட்சி அரசியல் உரிமையோ கிடையாது. அவர்கள் நடுநிலையாக கடமையாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாதுகாப்புப்படை அரசியல் கட்சி மயப்பட்டு ஏதாவது அரசியல் கட்சிக்கு சார்பாக நடந்து அரசியல் விவகாரங்களில் தலையிடவில்லை என்றே கூறப்படுகிறது. அதாவது பாதுகாப்புப் படையினரின் உயர் அதிகாரிகள் அவர்களுக்கு விரும்பிய கட்சியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டுமென வெளிப்படையான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயற்பட்டிருக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பதவியில் இருக்கின்ற அரசாங்கங்களுக்கு விசுவாசமாக பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் சேவையாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சகுனங்கள் தெரிகின்றனவா என்பது இன்று பேசு பொருளாகியுள்ளது.
அதாவது, 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக பாதுகாப்புப் படையினர் செயற்படுவார்களோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் பாதுகாப்புப் படையினர் அவர்களது கட்சி சார்பற்ற நிலையை உறுதி செய்தனர். புதிய அரசாங்கம் அமைவதற்கு இடையூறு விளைவிக்கவில்லை.
ஆனால் மஹிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் பாதுகாப்புப் படையினர் மத்தியில் அவர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் வகையில் ஆரம்பம் தொட்டே செயற்பட்டு வந்துள்ளனர்.
படையினரை போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தப் போவதில்லை என தொடர்ந்து கூறி வருவதுடன், மைத்திரி அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு துரோகமிழைக்கப் போவதாகக் கூறி படையினரை மஹிந்த தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
இதே மஹிந்த ராஜபக்ச 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற காணாமல் போனவர்கள் பற்றிய செயற்குழு கூட்டத்திற்கு இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிரான சாட்சியங்களைக் கொண்டு சென்றார்.
காணாமல் போனவர்கள் பற்றிய 533 ஆவணங்களையும் 19 பக்க புகைப்படங்களையும் ஜெனீவாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவை தடுத்து நிறுத்தப்பட்டன. அதற்கு எதிராக அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவரது கருத்து வெளியீட்டு சுதந்திரம் மீறப்பட்டதாக அவருக்கு சார்பாக தீர்ப்பையும் பெற்றுக்கொண்டார். அப்போது அவர் எதிர்க்கட்சியில் இருந்தார்.
அவர் ஜனாதிபதியாகிய பிறகு ஜெனீவா சென்று காணாமல் போனவர்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி செய்யப்பட்ட முறைப்பாடுகளை தேசத்துரோக நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்டதுடன் முறைப்பாடுகளை செய்தவர்களை ‘தேசத்துரோகிகள்’ என்று சாடினர்.
1990 களில் பாதுகாப்புப் படை வீரர் மீது இல்லாத பாசம், விசுவாசம் எல்லாம் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இல்லாது பாதுகாப்பு படை வீரர்களை அதிகமாக வசிக்கும் குருநாகல் மாவட்டத்தின் எம்.பி.யாக இருக்கும் தற்காலத்திலும் அது தொடர்கிறது.
பாதுகாப்புப் படையினருக்கு அரணாக தான் இருப்பதாக காட்டிக்கொண்டு அவர்களிடத்தில் அபிப்பிராய பேதங்களை அரசியல் கட்சி கொள்கையின் அடிப்படையில் ஏற்படுத்தி தனக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து விலக்கை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்.
அவரின் மகன் யோசித்தவின் கைதிற்கு கடற்படையில் சிலர் எதிர்ப்பைக் காட்டி இருப்பதற்கு மஹிந்தவின் தற்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாகும்.
பாதுகாப்புப் படையினர் இலங்கை அரசிற்குரியவர்கள் அவர்கள் அரசை இயக்கும் அரசாங்கங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி சேவையாற்ற கடமைப்பட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் விருப்பு, வெறுப்பு, கட்சி சார்பு தனிப்பட்ட இருக்க முடியும். பாதுகாப்புப் படையினர் என்ற பதவி நிலையில் அவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.
மஹிந்த ராஜபக்ச இன, மத சகிப்பின்மையைத் தூண்டி வருவதுடன், பாதுகாப்புப் படையினரிடையேயும் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தி அவற்றை வளர்க்க முற்படுகிறார். இவை பொறுப்புள்ள ஒரு அரசியல் தலைவர் செய்யக்கூடாதவை. அவருக்கு எதிராக சாட்டப்படும் நிதிமோசடி குற்றச்சாட்டுகள் ஒரு புறமிருக்க இனவாதத்தையும், மதவாதத்தையும், தூண்டுவதாக அவருக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்.
அவரது ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட வகையில் படையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் மேலோங்கியுள்ளன. ஆட்கடத்தல், கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சில படைவீரர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவை அரசியல் பழிவாங்கல்கள் என்று கூற முடியாது.
போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறுமாயினும் அவையும் அரசியல் பழிவாங்கல் என்றும் தேகத்துரோகச் செயல் என்றும் பிரசாரப்படுத்தப்படலாம். இதனுடாக மேலும் அரசியல் கட்சிகள் அபிப்பிராயங்களைப் பரப்பி படைத் தரப்பினரையும் குழப்பலாம்.
இவற்றை செய்பவர்கள் ஜனநாயக விரோதிகள் மட்டுமன்றி உண்மையிலேயே தேசத்துரோகிகளும் ஆவார். படையினர் அரசியல் கட்சி மயப்படுத்தப்பட்டால் பாரிய அழிவுபூர்வமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும்.