லசந்த கொலை சந்தேகநபர்களில் ஒருவருக்கு ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு?

287

இலங்கை காவல்துறையால் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று வெளியிடப்பட்ட உருவப்படங்களில் ஒன்று இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் இடம்பெற்றிருந்தவரும், சிராந்தி ராஜபக்சவின் சாரதியாகப் பணியாற்றியவருமான, கப்டன் திஸ்ஸ விமலவீரவின் ஒளிப்படத்துடன், காவல்துறையால் வெளியிடப்பட்ட உருவ வரைபடம் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைியல், அவருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பிருக்கலாம் என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலையில், தொடர்புடையவர் என்று கப்டன் திஸ்ஸ சந்தேகிக்கப்படுகிறார்.

அவர் வடக்கில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேவேளை கப்டன் திஸ்ஸ என்று எவரையும் தமக்குத் தெரியாது என்று நாமல் ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால், யோசித ராஜபக்சவுடன் கப்டன் திஸ்ஸ கலகலப்பாக பேசுவதைக் காட்டும் ஒளிப்படம் ஒன்று ஏற்கனவே ஊடகங்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரின் வரையப்பட்ட உருவப்படத்துடன் கப்டன் திஸ்ஸவின் உருவ அமைப்பு ஒத்துப் போவதால், இந்தக் கொலையில் ராஜபக்ச குடும்பத்துக்குத் தொடர்புகள் இருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி- ஊடகவியலாளர் லசந்தவின் கொலை தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

SHARE