கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றமையினால் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தெவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, யாழ். குடாநாட்டு வான்பரப்பில் மிகை ஒலிப் போர் விமானங்கள் அடிக்கடி வந்து செல்வதாகத் தெரிவித்துள்ள விமானப்படையினர், இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டு வான்பரப்பில் நேற்றுக் காலை 6.15 மணிக்கு திடீரென மிகைஒலிப் போர்விமானம் ஒன்று நுழைந்து நான்கு தடவைகளுக்கு மேல் வட்டமடித்தது.
காலையில் திடீரென இந்தச் சத்தத்தைக் கேட்ட மக்கள் திகைப்படைந்தனர். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 2.30 மணியளவில் மிகைஒலிப் போர்விமானம் ஒன்று யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பிரவேசித்திருந்தது.
போர் முடிவுற்றுள்ள நிலையில், விமானங்கள் தொடர்ச்சியாக குடாநாட்டு வான்பரப்பில் திடீரென ஏன் பறக்கின்றன என்பது தொடர்பில் விமானப்படையின் ஊடக அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, “கடற்படையினரும், விமானப் படையினரும் இணைந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாகவே குடாநாட்டு வான்பரப்பில் போர் விமானங்கள் பறந்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்றனர்.
