ஜனாதிபதி, பிரதமர் கொலை முயற்சித் திட்டம்! தொடர்புடைய பேஸ்புக் உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

250

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்கு உரிமையாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து பேஸ்புக் கணக்கு ஒன்றின் ஊடாக இவ்வாறு சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு, நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

2013ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தமை, ஜனாதிபதி பிரதமரை கொலை செய்ய முயற்சித்தமை, அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த நபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதிiயும் பிரதமரையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த 6ம் திகதி செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவின் கணனிப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

“சுபால் லக்மன” என்னும் பெயரிலான பேஸ்புக் கணக்கின் ஊடாக ஜனாதிபதி, பிரதரை கொலை செய்ய வேண்டுமெனவும் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமெனவும் காணொளி ஒன்றின் மூலம் கோரப்பட்டுள்ளது.

கொலை முயற்சிக்கு படைவீரர்கள் முன்வர வேண்டுமென காணொளியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த சந்தேக நபரை கைது செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் புலனாய்வு பிரிவினர் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேக நபர் நாடு திரும்பியவுடன் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

SHARE