சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால், விஷம் அருந்த போவதாக கூறிய, ஷிரந்தி ராஜபக்சவுக்கு புதல்வர்களுக்காக அல்ல தனக்காகவும் விஷம் அருந்த வேண்டிய அளவில் விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச கடந்த முதலாம் திகதி பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னரும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
விமல் வீரவன்ஸ வசித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால், கட்டப்பட்ட பெறுமதியான வீடு ஒன்றை, ஷிரந்தி ராஜபக்ச தனது ஊடக செயலாளர் ஒருவர் குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.
கஹாத்துடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 55 லட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்றை, ஷிரந்தி ராஜபக்ச, வீரவன்ஸ ஊடாக தனது ஊடக செயலாளருக்கு 5 லட்சம் ரூபாவுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
விமல் வீரவன்ஸ தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இவ்வாறு பெறுமதியான வீடுகளை குறைந்த விலையில் வழங்கியதாக குற்றம் சுமத்தப்படுவதுடன் அது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் உள்ளது.
ஏதோ ஒரு சிறப்புரிமை காரணமாக வீரவன்ஸவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிளவுப்படுத்தும் ஒப்பந்தத்தை செய்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வீரவன்ஸவுக்கு இந்த சிறப்புரிமையை வழங்கியுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வீட்டை குறைந்த விலைக்கு பெற்றுக்கொடுத்தமை மாத்திரமல்லாது சிரிலிய சவிய நிதியம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் விரைவில் வெளியிடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.