குடும்பத்தினரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது உட்பட எந்த அர்ப்பணிப்பையும் செய்ய தமது குடும்பம் தயாராக இருப்பதாக ராஜபக்ச குடும்ப பிரதிநிதிகள்,
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தகவல்களை அனுப்பி வருவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
எனினும் ராஜபக்ச குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகிந்த ராஜபக்ச ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுப்படுத்தினால்,
ராஜபக்சவினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்கும் வரை பொலிஸாருக்கோ, நீதிமன்றத்திற்கோ எந்த அழுத்தங்களையும் கொடுக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தனது குடும்பத்தை சேர்ந்த சிலரை மாத்திரமே குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து கொள்ளும் தேவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது.
எனினும் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சவினருக்காக ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்குமாறு ராஜபக்ச குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அந்த சிரேஷ்ட அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.