இலங்கையில் இடம்பேற்ற போர் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் தன்னுடைய மகன் தோன்றினார் என்று தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சாட்சியம் அளித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஐனாதிபதி ஆணைக்குழு முன் அவர் தனது மகன் சம்பந்தப்பட்டு வெளியிடப்பட்ட புகைப்படத்தையும் காண்பித்து அடையாளம் காட்டியுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றைய தினம் யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. இதன் போதே குறித்த தாய் தனது மகனை அடையாளம் காண்பித்துள்ளார்.
குறித்த தாய் தனது மகன் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் எனது மகன் புஸ்பராசா அஜிந்தன் காணாமல்போனார். பின்னர் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு சனல்-4 வெளியிட்ட இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான புகைப்படம் ஒன்றில் எனது மகன் இருக்கின்றான். படையினர் பிடியில் சில ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் உள்ள புகைப்படத்தில் எனது மகன் இருக்கிறான் என அந்த புகைப்படத்தை காண்பித்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் மேலதிக விசாரணைக்கு ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.