எங்கே வேகமும் துடிப்பும் மிக்க இளைஞர்களின் சிந்தனை தரம் உயர்ந்து சேவை உணர்வு இதயத்தில் உதிக்கின்றதோ அங்கே சமுதாயத்தில் அறிவு புரட்சியும் கலாசார மறுமலர்ச்சியும் தானாய் தோன்றும் என்ற எமது பூஜைக்குரிய குருதேவர் சுவாமி சின்மயானந்தரின் சிந்தனையிலிருந்து சின்மய யுவகேந்திரா தோற்றம் பெற்றது. பாரத தேசத்தில் குருதேவரால் தோற்றுவிக்கப்பட்ட சின்மய யுவகேந்திரா இளைஞர் அணியினர் உலகளாவிய ரீதியில் 33 நாடுகளிலும் இலங்கையிலும் குருதேவரின் சேவையை தொடர்கின்றனர்.
சின்மய யுவகேந்திரா இளைஞர்கள் சனாதன தர்மத்தின் சாஸ்த்திரங்களை கற்பதோடு நின்றுவிடாமல் அவற்றை நடைமுறை வாழ்க்கையில் பிரயோகிக்கும் வண்ணமும் தாம் கற்ற விடயங்களை இளைஞர்களிடையே கொண்டு செல்லும் நோக்குடனும் ஆன்மீக வதிவிட முகாம்களை வருடாவருடம் ஒழுங்கு செய்வது வழக்கம். அவ்வகையில் ‘BMI – மாத்தி யோசி ‘என்ற தலைப்பில் இளைஞர் வதிவிட இராம்போத சின்மய கோவில் வளாகத்தில் இடம்பெற்றது.
இம்முகாமின் தலைப்பு சுட்டிகாட்டுவது B-Body, M-Mind, I-Intellect என்பதாகும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் உடல், மனம், புத்தி என்பன வாழ்வதற்கான கருவிகளே. இக்கருவிகளின் இயல்பு என்ன?, இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?, வெறுமனே புலனின்ப தேவைகளை திருப்திப்படுத்துவதோடு நின்றுவிடாது. இவற்றை பயன்படுத்தி எப்போதும் ஆனந்தமாகவும் வெற்றியாளர்களாகவும் வாழ்வது எப்படி ? என்பது பற்றிய அறிவினை எமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவை தொடர்பான அறிவுடன் உலகம் என்பது பொருட்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் தொடர்பான அனுபவங்களால் தோற்றுவிக்கப்படுகிறது என்று வரைவிலக்கணபடுத்துவதோடு எமது சாஸ்திரங்கள் நின்றுவிடவில்லை. உடல் மனம் புத்தி ஆகிய கருவிகளை கொண்டு பொருட்களை உள்வாங்குபவராகவும் உணர்ச்சிகளை உணர்பவராகவும் எண்ணங்களை எண்ணுபவராகவும் இருந்து அனுபவிப்பவரே நான் ஆகிறேன் என்கிற தொடர்பையும் சாஸ்த்திரங்கள் விளக்குகின்றது. இவை அனைத்தும் எமது எண்ணப்பதிவுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகின்றது. எண்ணப்பதிவுகளில் ஆன்மீக விழுமியங்களை பதிப்பதனால் நாம் சாதனையாளர்களாகவும் சந்தோசமாகவும் எமது வாழ்க்கையை வாழமுடியும் என்ற ஆழமான தத்துவத்தை சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இவற்றை இளைஞர்களுக்கு எடுத்துகூறும் வகையில் இம்முகாம் அமைந்திருந்தது.
இளைஞர்களின் சிந்தனையில் தெளிவினையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் வண்ணம் சின்மயா மிஷன் ஆச்சாரியார் பிரம்மச்சாரி கார்திக் சைத்தன்யா அவர்களின் விரிவுரைகள் அமைந்திருந்தன. பங்குபற்றியவர்களுக்கு அவர்களது உடல் பலம், மன பலம், புத்தி பலம் என்பவற்றை சுய மதீப்பீடு செய்ய போட்டிகள், விளையாட்டுக்கள் என்பன மூலம் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அவர்களது கருத்துக்களையும் திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் பல நிகழ்வுகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் ஹட்டன், இராம்போத, பூண்டுலோயா, கண்டி, நாவலபிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களே பங்குபற்றியிருந்தனர்.
சுவாமி சின்மயானந்தர் சாஸ்த்திரங்கள் கூறும் தத்துவங்களை இளைஞர்களுக்கு விளங்கும் பாணியில் எடுத்துக்கூறும் வகையில் பல Áல்களை எழுதியருளினார். கீழ் தரப்பட்ட குருதேவரின் வார்த்தைகள் இளைஞர்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் தெளிவுறுத்துகிறது.
‘Youth are not careless
They are cared less
Youth are not useless
They are used less’
அவரது வார்த்தைகள் எமது மனதில் எதிரொலிக்கும் வரை சின்மய யுவகேந்திராவின் சேவைகள் தொடரும்.