நுவரெலியா ராகலை சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 10 இல் கல்வி பயின்ற மாணவன் S.தருமசீலன் குளிர் ஊட்டப்பட்ட தலைகவசம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். முற்றிலும் சூரியகலத்தின் உதவியுடன் செயற்ப்படும் இந் தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்ப்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு பிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிக்கப்பட்டு சான்றிதலும் வழங்கப்ட்டுள்ளது.
இந்த மாணவனின் திறமை குறித்து அன்மைகாலமாக ஊடகங்களில் பல்வேறுபட்ட கட்டுரைகள் வெளியாகின. இதன் பயனாக நாடளாவிய ரீதியில் வாழ்த்துக்களும் உதவிகளும் கிடைத்தன. தற்போது இந்த மாணவனுக்கு தனது விஞ்ஞான கல்வியை திறம்பட நிறைவேற்றுவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க ஹட்டன் ஹலண்ட்ஸ் கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சிபார்சு கடிதத்தை மாணவன் அமைச்சில் அண்மையில் பெற்றுக்கொண்டு தற்போது மேற்படி கல்லூரியில் தனது படிப்பினை ஆரம்பித்துள்ளார்.
அனுமதியை வழங்கியமை தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களிடம் வினவிய போது,
உண்மையாகவே மலையகத்தில் திறமையான மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உரிய இடத்தினை பெற்றுகொடுக்க வேண்டியது எங்களின் கடமையாகும். இந்த மாணவர் மலையகத்தில் கண்டுபிடிப்பின் மூலம் சாதனை நிலை நாட்ட விரும்புகின்றான். அதன் முதற்படியே இந்த குளிரூட்டப்பட்ட ஹெல்மட் கண்டுபிடிப்பாகும். இதனாலேயே இந்த மாணவனுக்கு ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்வியை தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற சாதனைகளை வெளிப்படுத்தும் ஏனைய மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் இவ்வாறான மாணவர்கள் காணப்பட்டால் எமக்கு அறிவியுங்கள், என்று கூறினார்.
இந்த மாணவனுக்கு கற்பித்த விஞ்ஞான ஆசிரியர் கிருஷ்ணசாமி கமலதாசன் அவர்களிடம் இந்த மாணவன் தொடர்பில் வினவியபோது, இம்மாணவர் தரம் 6 இருந்து தன்னிடம் கல்வி பயின்று வருகின்றார். விஞ்ஞான கற்பித்தலின் போது ஆர்வத்துடனும் ஆக்க சிந்தனையுடனும் செயற்படுவார். சூரிய சக்தியின் மூலம் இயங்கும் உபகரணங்களை பற்றி பேசும் போது இந்த குளிரூட்டப்பட்ட ஹெல்மட் பற்றி கூறி செய்து காட்டினார். அதை வலய மட்ட போட்டிக்கு கொண்டு சென்றோம். அங்கு முதலாமிடம் கிடைத்தது. ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் இவருக்கு தங்கப்பதக்கமும் முதலாமிடம் பெற்றதற்கான சான்றிதழும் கிடைத்தது. இவருடைய ஆர்வமும் ஆக்கசிந்தனையுமே இச்சாதனைக்கு காரணமாக அமைந்தது. இவருக்கு இன்னும் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் சிறந்த கண்டுபிடிப்பாளராக வருவார், என்று கூறினார்.
பாடசாலை அதிபர் எ. சிவரஜா அவர்களிடம் வினவியபோது வலய மட்டத்தில் நடைபெற்ற புத்தாக்க போட்டியில் எமது பாடசாலையில் 8 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அதில் இம்மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவானார். இம் மாணவன் எந்த ஒரு விடயத்தையும் கூறுகின்ற போழுது கிரகித்து ஆசிரியரின் வழிகாட்டலின்படி செயற்படுவதில் திறமை வாய்ந்தவர். இவரின் புத்தாக்க எண்ணக்கருவே இவரின் சாதனைக்கு காரணமாக அமைந்தது. என்று கூறினார்.
இம்மாணவனின் தந்தை சின்னசாமியை வினவிய போது, இவரின் தாய் வெளிநாட்டில் இருக்கின்றார். இவர் சிறுவயதிலிருந்தே இதுபோன்ற கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முயற்சிகளில் ஈடுபடுவார். இவருக்கு உறவினர்கள் உதவி செய்வார்கள். இவர் மென்மேலும் இவ்வாறான சாதனைகளை புரிய வேண்டும் என்பது என்னுடைய கனவாகும், என்று கூறினார்.
இது தொடர்பில் மாணவனிடம் விளவிய போது முதலில் நான் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு நன்றி செலுத்த விரும்புகின்றேன். எனக்கு ஹட்டன் ஹலண்ட்ஸ் கல்லுரியில கல்வி பயில வாய்பு பெற்றுக் கொடுத்தமைக்கு நான் நுவரெலியா ராகலை பிரதேநத்தில் CP/W/S.T சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் எனும் பாடசாலையில் கல்வி கற்கின்றேன். எனது விருப்பம் அப்துல் கலாம் போன்று ஆவது. இதுவே எனது நீண்ட நாள் கனவு. சிறுவயது முதல் சிறு சிறு விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றேன். 14 ஆம் வயதில் இலகு சமயல் உபகரணம் கண்டு பிடித்து நுவரெலியா மாவட்டத்துக்கான இரண்டாம் இட சான்றிதழை பெற்றேன். அடுத்து எனது 15 ஆம் வயதில் சிறிய விமானத்தை வடிவமைத்து அதற்கும் நுவரெலியா மாவட்டத்துக்கான 2 ஆம் இடத்திற்கான சான்றிதழை பெற்றேன்.
எனது அடுத்த கண்டுபிடிப்பான நவீன பாதுகாப்பு கவசத்தை கண்டுபிடித்துள்ளேன். இது சூரிய சக்தியில் இயங்கக்கூடியது. இந்த தலைக் கவசத்தில் இருக்கக்கூடிய சூரிய சக்தி மின் உற்பத்தி ஆக்கி மூலம் பொருத்தபட்ட விசிரி சுழலும் போது தலை கவசம் குளிராக இருக்கும். இதனால் முடி விழுவதை தடுக்கக்கூடியதாக இருக்கும். இதற்காக மருந்துகளுக்கு செலவு செய்யும் செலவுகளை சேமிக்கக் கூடியதாகயிருக்கும்.
இனி வரும் காலங்களில் எனது அடுத்த கண்டுபிடிப்புக்களாக மனிதனால் இயங்கக் கூடிய ரொபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக் கூடிய மோட்டார் வண்டி ஆகியன உள்ளன. மேற்கண்ட எனது திறமைகளை இனங்கண்டு எனது பாடசாலை அதிபர் திரு.வி. சிவராஜ் அவர்களும் மற்றும் சக ஆசிரியர்கள் விஞ்ஞான பிரிவு ஆசிரியர் திரு.கமலஹாசன், திருமதி. ஜேமிலா உமா மற்றும் எனது வகுப்பாசிரியர் திருமதி. விஜயகலா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். எனது எதிர்கால பிரயோசன மிக்க கண்டுபிடிப்புக்களுக்கு இன்னும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்விசார்ந்த அமைப்புகளும், பொது அமைப்புக்களும், தனியார் அமைப்புக்களும் உதவி புரியுமாயின் எனக்கு செய்யும் மிப்பெரிய உதவியாக இருகும். இத்தருனத்தில் எனது தந்தை எஸ்.சின்னசாமி தாய் திருமதி. ஆதிலெச்சுமி அவர்களுக்கு மகனாக பிறந்ததை நினைத்து பெருமை அடைகின்றேன் அவர்களுக்கும் நன்றி; என்று கூறினார்.
படங்களும் தகவலும்:- பா.திருஞானம்