
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்புண்டு என கூறுமாறு படைவீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதா படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுனில் ரட்நாயக்க என்ற படைவீரர் இதனைத் தெரிவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோத்தபாய ராஜபக்ச இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு எனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என சுனில் ரட்நாயக்க கூறியிருந்தார்
கடந்த 21ம் திகதி சுனில் ரட்நாயக்கவின் பிறந்த நாளாகும். நான் உள்ளிட்ட 3 பௌத்த பிக்குகள் சென்று சுனில் ரட்நாயக்கவை பார்வையிட்டோம். மூன்று பௌத்த பிக்குகளுக்கு மட்டுமே சுனில் ரட்நாயக்கவை சந்திக்க அனுமதிக்கப்பட்டது.
நாம் சிறைக்குச் சென்று பிரித் சொல்லி அவரது மனதை வலிமையாக்கினோம்.
கோத்தபாய இதனைச் செய்யச் சொன்னார் என கூறுமாறு அழுத்தம் கொடுக்கின்றார்கள் எனவும், அவ்வாறு சொல்லாத விடயத்தை நாம் எவ்வாறு கூறுவது எனவும் சுனில் ரட்நாயக்க எம்மிடம் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவு படையினரை கைது செய்து தடுத்து வைத்துள்ள நீதவான் கூட எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கோ, கடத்தப்பட்டமைக்கோ சாட்சியங்கள் கிடையாது என கூறுகின்றார்.
அவ்வாறான நிலையில் படைவீரர்களை சிறையில் தடுத்து வைத்திருக்க முடியாது.
சானி அபேசேகர என்ற பொலிஸ்காரர் பிரதமர் ரணிலின் உத்தரவுகளை பின்பற்றுகின்றார். சானி உள்ளிட்ட சில பொலிஸ்காரர்கள் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர்.
சட்டத்தரணியான திலீப பிரிஸ் என்பவர், சட்டத்தரணி சேவைக்கே அவமானம் ஏற்படும் வகையில் செயற்படுகின்றார்.
இங்கிலாந்தின் தேவைக்கு ஏற்ற வகையில் ரணில் விக்ரமசிங்க படைவீரர்களை கைது செய்கின்றார் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.