இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் உயர்வெப்ப நிலைக்கு சமாந்தரமான முறையில் கொழும்பிலும் தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
கொழும்பில் தற்போது 33.3 செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. பொதுவாக மனித உடல் 31 செல்சியஸ் வரையான வெப்ப நிலையை மட்டுமே தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது.
அதற்கு கூடிய வெப்ப நிலை நிலவும் போது சிறுநீரகங்கள், இருதயம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் பாதிப்படையாம் என்று கூறப்படுகின்றது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான் வெளியின் உயர்அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாதிருப்பதன் காரணமாக மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே வெப்ப நிலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் தற்போதைய வெப்பநிலையானது எதிர்வரும் மே மாதம் வரையிலும் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக வெப்பம் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப நிலை தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போத அசாதாரணமான வெப்ப நிலைமை காணப்படுகின்றது.
கர்ப்ப்பிணி பெண்களின் சாதாரண உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது கருவை பாதிக்கும் என மகப்பேற்று மருத்துவ நிபுணர் டொக்டர் ருவான் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
கர்ப்பிணி தாய்மாரின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
38 செல்சியஸ் பாகை வெப்பநிலையில் கர்ப்பிணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும்.
அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க கர்ப்பிணி தாய்மார் அதிகளவு நீரை பருக வேண்டும் என டொக்டர் ருவான் சில்வா தெரிவித்துள்ளார்.