
ஒரு காலகட்டத்தில் சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை இன்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு வலுமிக்க நண்பர்கள் இருப்பதாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பக்கத்தில் ஜனாதிபதி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின்போது தம்மை பொதுமக்கள் தெரிவுசெய்ததன் அடிப்படையில் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுதந்திரத்துக்கு பின்னர் கட்சி பேதங்களால் பிளவுப்பட்டிருந்த இலங்கையில் மாற்று அரசியல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமது அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு வருடங்களுக்கு முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.