மைத்திரியும் மஹிந்தவும் ஒருபோதும் இணையப் போவதில்லை!

238
ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
Untitled-1_copy-1

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

குண்டு வைத்தோ, துப்பாக்கி முனையிலோ குறிப்பிட்ட சில மக்களின் கொள்கை, நம்பிக்கை அல்லது அவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானங்களை மாற்ற முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

இது ஜனாதிபதியின் தனிப்பட்ட கொள்கையாகும். மாறாக சுதந்திர கட்சியின் கொள்கை அவ்வாறு இருக்கவில்லை. அதனால்தான் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படவில்லை.

இன நல்லிணக்கம் மூலமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

அதேபோன்று 2002ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட போது அதனை சிலர் எதிர்த்தனர். ஒப்பந்தம் தான் சரியான நடவடிக்கை என்று நாங்கள் கூறி வந்தோம்.

ஆனால் மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, மக்களிடம் பொய் கூறிவந்தனர். இல்லாவிட்டால் யுத்தம் இன்றி அதிகாரப் பகிர்வின் மூலம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.

அத்துடன் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த வென்றாலும் ரணில் வென்றாலும் ஒன்றும் ஏற்படப் போவதில்லையென பிரபாகரன் கூறிய பொய்யின் விளைவால் அந்த மக்களின் பாதிப்பேர் அழிந்து விட்டனர்.

அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 29ஆயிரம் வாக்குகளால் தான் தோல்வியுற்றார். இது ஓர் வரலாற்று தவறு என்பதை தற்போது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இன நல்லிணக்கம் மூலமே மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறி வருவதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்சவையும் மைத்திரிபால சிறிசேனவையும் இணைப்பதற்கு ஒருசிலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரதும் கொள்கை பாரியளவில் வித்தியாசமாகும். அவ்வாறு இருக்கும் போது இவர்களை ஒன்றிணைப்பது ஒருபோதும் இடம்பெறாத விடயமாகும்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச தற்போது அவருடைய காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த தவறுகளுக்கு தான் மட்டும் பொறுப்பில்லையென தெரிவித்து வருகிறார். அவருடைய இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் 18வது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்து தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு அமைச்சர்மார்களின் வாயை மூடிவிட்டார். அமைச்சர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியவில்லை.

அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்தால் அது காணாமல் போகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளுக்கு அவருடன் அமைச்சரவையில் இருந்தவர்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்.?

மேலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். ஒருசிலரை மீட்டுள்ளோம். ஏனையவர்களையும் அதில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அத்துடன் சோசலிஷ முன்னிலை கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் அரசியல் கைதியாகவே தொடர்ந்து சிறையில் இருக்கின்றார். அவரையும் நீதிமன்றம் விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

SHARE