காலி, மொரவக்க- களுபோவிட்டியன ருவன்கந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 வயதான மாணவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, லொறி ஒன்றில் வந்த சந்தேக நபர், மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.
மாணவியை பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று சந்தேக நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் மொரவக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் வீட்டுக்கு சென்ற சந்தேக நபர் மாணவியை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.
எனினும் மாணவியின் வீட்டுக்கு அருகில் சந்தேக நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொலையை செய்ததாக கூறப்படும் இரண்டு பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
40 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.