கிளிநொச்சி. மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர்இடம் பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என கிளிநொச்சி.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த இரண்டு தினங்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக உருவாகியுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக இன்றைய தினம் மாலை 5 மணிக்கு கிடைக்கப் பெற்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்களே இவ்வாறு தெரிவிக்கின்றன
இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கரச்சி, மற்றும் கண்டாவளையை சேர்ந்தவர்கள் எனவும் கராச்சியை சேர்ந்த 49 குடும்பங்களை சேர்ந்த152 பேர் மருதநகர் பொதுநோக்கு மண்டபம் மற்றும் தாரணி குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் கண்டாவளையை சேர்ந்த 26 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் சிவபுரம் முன்பள்ளி , புன்னைநிராவி பொது மண்டபம் மற்றும் நாதன்குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
373.2 மில்லி மீற்றராகப் பதிவு!!
கடந்த சில தினங்களாக நாட்டின் பெய்த மழை வீழ்ச்சியில் அதிகளவு மழை வீழ்ச்சி கிடைத்த இடங்களில் கிளிநொச்சியும் ஒன்றாகும். அந்த வகையில் கிளிநொச்சியில் அதிக மழைவீழ்ச்சியாக 373.2 மில்லி மீற்றர் அளவில் அங்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளை விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாங்களில் தங்கியுள்ளனர். சிலர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துள்ளனர். நேற்றிரவு இராணுவத்தினர் மக்களை வீடுகளிலிருந்து அகற்றி இடைத்தங்கல் முகாம்களில் சேர்க்க முயற்சித்தபோது பெரும்பாலானவர்கள் அதனை மறுத்து வெள்ளம் நிரம்பிய வீடுகளிலேயே தங்கியிருந்தனர்.
இது தவிர கட்டுநாயக்க , கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.