அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா அவென்யூ அருகே 17-வது தெருவில் அமைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முதன்மை அலுவலகத்தின் அருகே, உள்ளூர் நேரப்படி மதியம் 2 அளவில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதும், சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்றுவருவதாக வாஷிங்டன் நகர பொலிசார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உளவு அமைப்பினரின் எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் எவருக்கும் இந்த சம்பவத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
19-ஆம் நூற்றாண்டில் இருந்தே அரசு அலுவலகமாக செயல்பட்டுவரும் இந்த வெள்ளை மாளிகையானது பல முறை பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி பில் கிளின்டன் உதைப்பந்தாட்டம் பார்த்துக்கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வெள்ளை மாளிகை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அதே ஆண்டு உரிய அனுமதியின்றி வெள்ளை மாளிகை மீது வட்டமிட்ட குட்டிவிமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானி உயிரிழந்தார்.
2001 ஆம் ஆண்டு Robert Pickett என்பவர் வெள்ளை மாளிகையின் வெளியே நின்று துப்பாக்கியால் சுட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற களேபரத்தின் இறுதியில் உளவு அமைப்பினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கீழ்ப்படுத்தினர்.
துப்பாக்கி சூடு நடைப்பெற்ற போது ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.