முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜ பக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப்பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளமை பாதுகாப்பு பேரவையின் தீர்மானமேயாகும். அதனை தடுக்க முடி யாது எனவும் பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த 50 இராணுவ வீரர்களில் 25 இராணுவத்தை நீக்கி அதற்கு பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலையில் இருந்து அமுலுக்கு வரும் வரையில் தீமானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் வினவியபோதே பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு 50 இராணுவம் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதில் 25 பேரை குறைத்து அதற்குப் பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையை நியமிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பை முற்று முழுதாக நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு சபையில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இப்போது வரையில் வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பில் பாதியளவில் குறைத்து அதற்கும் பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையை வழங்க பாதுகாப்பு சபை தீர்மானம் எடுத்துள்ளது.
இப்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழல் மற்றும் அச்சுறுத்தல் எவையும் இல்லாத நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு சபையின் தீமானமேயாகும். அதனை தடுக்க முடியாது. இதேபோல் இப்போது வழங்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நன்று பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்களாலும் சரியான பாதுகாப்பை அவருக்கு வழங்க முடியும் என்றார்.