பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லொறி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை “பயங்கரவாதத் தாக்குதல்” என வர்ணித்துள்ளார்.
“ப்ரோமனேட் தேஸாங்கிலே” என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
லொறியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.
லொறி ஓட்டுநர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு இது வரை எந்தக்குழுவும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போலிசார் இதை விசாரிப்பார்கள் என்று அரசவழக்கறிஞர்கள் கூறினர்.