மன்னார் – பள்ளிமுனை கிராமத்தில் கடற்படைக்கென காணி அளக்கும் முயற்சி பொது மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பள்ளிமுனை பகுதியில் 22 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென அளக்கும் முயற்சி இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதேச செயலரின் அனுமதியுடனேயே தாம் காணி அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட தயாரானதாக நிலஅளவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணி ஏற்கனவே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த காணிக்கான 20 வழக்குகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி 21ஆவது வழக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காணிக்குரிய வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தி கடிதம் ஒன்று தருமாறு நில அளவையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும்,
இதனை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் சார்பாக இருவர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வழங்கிய பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றதாகவும் ஜோன் பொஸ்கோ என்ற காணி உரிமையாளர் தெரிவித்தார்.