அண்மைக்காலமாக வடமாகாணசபையில் எழுந்துள்ள வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாணசபையின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாக வட மாகாண சபையில் தற்போது பதவியில் இருக்கக்கூடிய அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் தீர்மானம் கடந்த வடமாகாணசபை அமர்வின்போது கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக வவுனியாவில் 14.08.2016 அன்று இடம்பெற்ற மத்தியக்குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் இதற்கு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அங்கத்தவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், அபிவிருத்திகளையும் சீர்குலைக்கும் நோக்கில் முதலமைச்சரது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும், இதனைச் சீர்செய்யும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழுக்கூட்டம் அவசரமாக ஒழுங்குசெய்யப்பட்டது. இதில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக இந்த மத்தியக்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் அது முதலமைச்சரின் அரசியல் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வடமாகாண சபையிலே கொண்டுவரப்படவிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவையின் பின்னின்று வடக்கு முதல்வர் செயற்படுவதானது அவர் தனக்குத்தானே குழிவெட்டும் செயற்பாடாகவே அமையும் எனலாம். ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்’ செயற்பாட்டை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்திருப்பது அவரின் இயலாமையை வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.
தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிவகரன், அனந்தி சசிதரன் ஆகிய இருவரும் 03 வருடங்கள் உறுப்பினர்களாகச் செயற்பட தமிழரசுக்கட்சி அனுமதி
இன்றைய தினம் (14.08.2016) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது ஏற்கனவே கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தன்னிச்சையாகச் செயற்பட்டதாகக் கூறப்பட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பதவி சிவகரனிடமிருந்து பறிக்கப்பட்டு 03வருடங்களுக்கு எவ்வித பதவிகளும் இன்றி அவர் உறுப்பினராகச் செயற்பட தமிழரசுக்கட்சியினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களுக்கும் 03வருடங்கள் உறுப்பினராகச் செயற்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் இவர்களுடைய செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு, இவர்கள் கட்சியோடு இணைந்து செயற்படாதுவிடில் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் புதிதாக உள்வாங்கப்பட்ட வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (பா.உ)
தமிழரசுக்கட்சியுடன் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் இணைந்துவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும உத்தியோகபூர்வமாக அதனை தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் வவுனியாவில் 14.08.2016 அன்று நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் சிவமோகன் அவர்கள் புதிதாக உள்வாங்கப்பட்டமையானது அவர் தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர் என்பதை உறுதிசெய்துள்ளது. இதுவும் தற்காலிகமான இணைப்பு என்றே கூறப்படும் அதேவேளை இவர் ஏற்கனவே கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவலும் படங்களும்:- அலுவலகச் செய்தியாளர்(001)