முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய பீனிக்ஸ் மாறுவலுவுள்ளோர் அமைப்பால் யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு கணினி அறிவை கொடுக்கும் வகையில் புதிய இலவச கணனி கற்கை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, குறித்த நிலையத்தை 27-08-2016 சனிக்கிழமை மாலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
குறித்த நிகழ்வில் தனது கருத்தை தெரிவித்த அமைச்சர், இயலுமான தன்மையுள்ளவர்களே இவ்வாறு சிந்திக்க தவறுகின்ற இந்த காலப்பகுதியில் புதிய பீனிக்ஸ் மாற்றுவலுவுள்ளோர் அமைப்பின் தலைவர் அவர்கள் தனது இரண்டு கால்களையும் யுத்தத்தில் இழந்தும் இன்னமும் மனவலிமையுள்ளவராக தன்னாலான இவ்வாறான இலவச கணனி கற்கை நிலையத்தை திறந்து கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை தாம் வியந்து பாராட்டுவதாகவும், அதன் காரணமாகவே தம்மிடம் கணனிகளுக்கான கதிரைகள் வேண்டும் என்று கேட்டபோது உடனே அவற்றை வழங்கினேன் என்றும், இவ்வாறான முன்மாதிரியான செயல்திட்டங்களை தாம் எப்போதும் வரவேற்பதாகவும் இதன் மூலம் கல்வி கற்கின்ற மாணவர்கள் தமது எதிர்கால வாழ்வை கணனி அறிவில் கூட்டிக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.