கிளிநொச்சி மாவட்டத்தில் 142 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள ஒப்படைப்பு!

219

625.117.560.350.160.300.053.800.210.160.90

கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 142 ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த வெள்ளிக்கிழமை 2ம் திகதி மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாக கிளி.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் பொதுமக்களுக்கு சொந்தமான மற்றும் அரச காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அந்தக் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குறித்த காணிகள் தொடர்பான விபரங்கள் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதன்படி படையினரால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அதாவது கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள 109 ஏக்கரும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 25 ஏக்கரும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 6 ஏக்கரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் பயிர் செய்கை காணிகள், குடியிருப்பு காணிகள் என்பனவும் அடங்குகின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளிலிருந்து படையினர் வெளியேறி அக்காணிகளை அந்தப்பிரதேச செயலர்களிடம் கையளித்து வருகின்றனர்.

கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் சிறுவர் இல்லம் இயங்கி வந்த காணி மற்றும் ஏனைய நிலப்பரப்புகள் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE