பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (06)உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடைய வாழ்க்கையை பாதுகாப்பது அரசின் கடமை, பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மஹிந்தவிற்கு இலங்கையிலும், வெளிநாட்டு சுற்றுலாக்களின் போதும் பாதுகாப்பை பெற்றுத் தருமாறும், வழங்கப்படும் பாதுகாப்புகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்தவின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது தனக்கு வேண்டிய பாதுகாப்பை மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ள பிரதமர் மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பாக அந்த நாட்டு அரசின் பூரண அறிக்கையினையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.