புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
29 ஆயிரம் படையினர் தமது உயிர்களை தியாகம் செய்து மீட்ட இந்த நாட்டை துண்டாட ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச சூளுரை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவரான கலாநிதி குணதாச அமரசேகர எழுதிய சிறந்த நாட்டை கட்டியழுப்புவதற்கான பயணம் என்ற நூல் அறிமுக விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட மக்கள் அணி திரள வேண்டும், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இன்று நாம் வெளிநாடுகளுக்கு கீழ்படிந்த யுகத்தில் இருப்பதாக நான் கருதுகிறேன். நாம் வெளிநாடுகளுடன் இணைந்து யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆணைக்குழுக்கள் தொடர்பில் நாமே ஆலோசனை முன்வைக்கின்றோம்.
நாம் இணை ஆலோசகராக மாறுகின்றோம். அந்த நிலை இன்று உருவாகியுள்ளது. நாம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றத்தை உருவாக்க வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுக்கின்றார். பான் கீ மூன் இங்கு வந்து கத்துகிறார். இனவாதத்துடன் இனப்படுகொலை நடைபெற்ற நாடுகளின் பட்டியலில் எம்மையும் இணைக்க அவர் தயாராகின்றார். நாங்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல தடவைகள் மூன் என்னை சந்தித்திருக்கின்றார். யுத்தத்திற்கு முன்னரும் என்னை சந்தித்தார், பின்னரும் என்னை சந்தித்தார். யுத்ததத்தின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் இவ்வாறான ஒரு கதையை கூற முனையவில்லை. இது புதிய கதை எமது நாட்டில் இருந்துகொண்டு எம்மை பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்.
நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்காக குரல்கொடுத்தால் அவர்களை இனவாதிகள் என்றும் கடும்போக்காளர்கள் என்றும் முத்திரை குத்தி அரசாங்கம் திட்டமிட்டு ஓரங்கட்டி வருகின்றது. தனது சூழ்சிகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவே இவ்வாறு அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுவருகின்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது