ஏழை விவசாயி ஒருவரின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. எனவே விவசாயிகளின் காணி பற்றி அவருக்கு நன்கு தெரியும், அவர் தலைமையிலான இன்றைய நல்லாட்சியில் தமிழ் மக்களது காணிகளுக்கு நல்லதீர்வு கிடைக்கும் என கோடீஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு,ஆலையடிவேம்பில் நேற்று காலை இடம்பெற்ற விவசாயிகளின்ஆர்ப்பாட்டத்தை முடிவுறுத்தி வைத்து பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த ஆட்சியில் தமிழ்மக்களது காணிகள் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டன. அதைப்போன்று இன்று நடக்காது.
நல்லாட்சி அரசாங்கம் நமக்கு நல்ல தீர்வைத்தரும். இது வட்டமடு பிரச்சினை அல்ல, தோணிக்கல் காணிகளில் 1200 ஏக்கரை நான் ஏற்கனவே விடுவித்து விவசாயச் செய்கைக்காக தந்திருக்கின்றேன். அது தற்காலிக தீர்வாக இருந்தது.
அதுபோல இன்று நீங்கள் முன்வைக்கின்ற பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் அது நிரந்தர தீர்வாக இருக்குமென நம்புகின்றேன்.
வனபரிபால இலாகாவே நிலஅளவைத் திணைக்களமோ அந்தப் பிரதேசத்தின் பிரதேசசெயலாளரை அல்லது கிராமசேவையாளரை கலந்தாலோசிக்காமல் அனுமதி பெறாமல் அளக்க முடியாது.
உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றேன். வனபரிபாலன இலாகா பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி நல்ல தீர்வுக்கு வரலாமெனஎண்ணுகினறேன் என்றார்.
கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதேசசெயலாளர்களான வி.ஜெகதீசன் சிவ.ஜெகராஜன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.