கிளிநொச்சி நகரின் வடிகால் அமைப்பு குறைபாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான களப்பயனம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர்.
கிளிநொச்சியில் நகரின் வடிகால் அமைப்பு முறையில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதனை அடுத்து உரிய அதிகாரிகளோடு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
கிளிநொச்சி அரச செயலகம் மற்றும் பிரதேச சபையை சூழவுள்ள கழிவு வாய்க்கால் பொருத்தமான முறையில் அமைக்கப்படாமையினால் ஒவ்வொரு பருவ மழையின் போதும் வர்த்தகர்கள் பெரு நட்டத்தை அனுபவித்து வந்தனர். மளிகைக்கடைகளும் இலத்திரனியல் கடைகளும் உணவங்களும் மோசமான வெள்ளப்பாதிக்குள்ளாகுவதால் பல மில்லியன் நட்டம் ஏற்பட்டதுடன், காப்புறுதி நிறுவனங்களும் காப்புறுதிகளை தொடர்ந்து வழங்குவதில் பின்னடைவு காணப்பட்டது.
இதனை அடுத்து இப்பகுதிகள் நிலைமைகள் ஆராயப்பட்டு பொருத்தமான வடிகால் அமைப்புக்களை ஏற்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வடிகால்களை சீரமைக்கவும் புதிய வடிகால்களை அமைக்கவும் எதிர்வரும் பருவமழைக்கு முன்பதாக நடவடிக்கை எடுப்பதாக கரைச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதன் தெரிவித்தார்.
இந்த நேரடி விஜயத்தின் போது பிரந்திய உள்ளுராட்சி உதவி ஆணையர் பிரபாகரன் பிரதேசசபைச் செயலாளர் கம்சநாதன் வர்த்தகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.