வவுனியாவில் நீர்வடிகாலமைப்பு சபையால் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீரில் மண் கலந்து வருவதாக வவுனியா நகரையண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா நகரையண்டிய கற்குழி, வைரவபுளியங்குளம், குருமன்காடு போன்ற பகுதிகளுக்கான குழாய் நீரில் மண் கலந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அந்நீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காலைவேளைகளிலும், சில தினங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது.
இதனால் நீர் கறுப்பு மற்றும் கலங்கல் நிலையில் வருவதால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீராடிவிட்டு செல்ல முடியாத நிலை கூட ஏற்படுவதாகவும் அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.