கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும் கருணையோகம் புத்தக வெளியீட்டு விழா என்பன இன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றன.
பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழாவில் போராசிரியர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நயப்புரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமிஸ் அப்துல்லாஹ், கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்திரு ஏ.ஏ. நவரட்ணம் உள்ளிட்டவர்கள் நிகழ்த்தினர்.
நூல் வெளியீட்டுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலண்டினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.
நூலின் முதல் பிரதியை மட்டக்களப்பு தமிழ் சங்கப் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்திக்கு பேராசிரியர் வழங்கி வெளியிட்டு வைத்தார்.
பேராசிரியருக்கு மலையகம், அம்பாரை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து பல்துறை சார்ந்தோரால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் விழா நாயகனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.