இலங்கையின் வெவ்வேறு இடங்களில் இன்று இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்தார்.
வவுனியா பம்பைமடு மற்றும் அம்பாறை பொத்துவில், பூண்டுலோயா பகுதிகளில் இன்று காலை இடம்பெற்ற விபத்திலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.வவுனியா பம்பைமடு வளாகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரியதம்பனையில் இருந்து வவுனியா மரக்கறி சந்தைக்கு வாழைக்குலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தவர் மீது பெரியதம்பனை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்தவரை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா நோக்கி செல்வதற்காக பாதையை கடந்த பெண் ஒருவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த பெண் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சடலம் பூண்டுலோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் அம்பகஹாவத்த கெதர உதயணி என்ற 47 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊறணி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுடன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதுடைய பாணமை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், படுகாயமடைந்தவர் 25 வயதுடைய திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்தவர் என வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த இருவரும் பாணமை பிரதேசத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், திருக்கோவிலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 2 மணியளவில் வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.