இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரளா கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று மருதங்கேணி கடற்கரையில் இருந்த 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்
இருப்பினும் சந்தேக நபர்கள் யாரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.