தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நல்லூரில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தாயார் ஒருவரும் திலீபனின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார்.
அவர் திலீபனின் ஒப்பற்ற தியாகத்தை வியந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய விதம் அவரை உற்று நோக்க வைத்தது.
அதில் அவர் கூறுகையில்,
தியாகச் செம்மல் திலீபன் அவர்கள் எமக்காக ஆற்றிய தியாகத்தை உண்மையிலேயே சொல்லப் போனால் என் இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது.
தியாக தீபத்தின் நினைவு நாளை மீண்டும் நாம் சந்திகள் தோறும், வாசல்கள் தோறும், கிராமங்கள் தோறும் நினைவு கூர வேண்டும். அந்த நாளுக்காக நாம் பெரு மூச்சை இறைத்தபடி காத்திருக்கிறோம்.
தமிழினத்துக்கு ஒரு விடிவைத் தேடித் தான் தியாகி தன் உயிரை நீர்த்துக் கொண்டான்.
இந்திய மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுப்பதற்கு மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராட்டத்தை நடாத்தி இருந்தார்.
அந்த காந்தீயப் போராட்டத்தை மதித்து வெள்ளைக்கார அரசு அந்நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கி இருந்தது.
எமது பிள்ளை தியாகி திலீபனும் அந்த அறவழியை பின்பற்றி போராட்டத்தை செய்வதற்கு முன் வந்தான். இந்த அழகு முருகனின் வாசலிலே அந்தப் பிள்ளை கொலுவிருந்தான்.
இரு நாடுகளுக்கும் தனது கோரிக்கையை முன்வைத்தான். நாமும் அவனுக்குப் பின்னால் நின்றோம். உலக நாடுகளில் அகிம்சை வழியைப் பின்பற்றி உண்ணாவிரதம் இருந்த வரலாறுகள் உண்டு.
ஆனால், அந்த அகிம்சை வழியில் உயிரை நீர்த்த வரலாறு உண்டென்றால் அது நம் பிள்ளை திலீபனுக்கே உரியது. இந்த மகிமை பெருமை எங்கள் தேசத்துக்கும், தமிழ் இனத்துக்குமே உண்டு.
சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்துக்கு ஒரு விடுதலையை பெற்றுத் தருவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் என்றார்.