மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் அவசியம். மாதுபாவனையானது பெற்றோர் மது அருந்துதல், ஆசிரியர்கள் மது அருந்துதல், அரசியல்வாதிகள் மதுபாவனையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், சிறுவர்கள் மதுபாவனைக்கு பழக்கமடைதல் என நான்கு வகையாக வகைப்படுத்தலாம் என கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் கிங்ஸ்லி சந்திரலேகா தெரிவித்தார்.
பெருந்தோட்ட பனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் மதுபானம், போதைய்பொருள் தகவல் நிலையம் ஆகியன இணைந்து மலையகத்தில் மது அருந்துவோரும் அதனால் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான. ஆய்வு அறிக்கையை வெளியிடும் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
டிக்கோயா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் 28.09.2016 அன்று நடைபெற்ற இவ் ஊடக சந்திப்பில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார நிறைவேற்று அதிகாரி அனிருத்தபண்டார, முகாமையாளர் காந்தி பண்டார, மதுபானம், போதைப்பொருள் தகவல் நிலைய நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம், கொட்டகலை அரசினர் ஆசிரியர் காலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லி கோமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 85 வீதமானோர் மதுபாவனையில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 15 வீதமானோர் மாத்திரமே மது அருந்தாதோராக காணப்படுவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. பெற்றோர்கள் மது அருந்துவதனால் 80 வீதமான சிறுவர்கள் பாதிப்படைகின்றனர். போசாக்கான உணவு கிடைக்காமை, பிள்ளைகளின் கல்வி பாதிப்படைதல், பிள்ளைகளைத் துன்புறுத்துதல், பொருளாதாரப் பிரச்சினைக்கு ஆளாகுதல் என ஆய்வுகளில் வகைப்படுத்தப்பட்டது.
ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்தகாலத்தில் பிரசவத் தாய்மார்களுக்கு சிறிதளவு மதுபானம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சரிநிகராக வீடுகளில் பியர் போன்ற மதுபானங்கள் ஆண்களுக்கு நிகராக பாவனைக்குட்படுத்துவதை அறியமுடிகின்றது.
பெற்றோர்களின் மதுபாவனையினால் குடும்ப வறுமை தலையெடுப்பதுடன் பொருளாதர சுமை ஏற்படும். சிறுவர்கள் கல்வி பாதிப்படையும். குடும்பத்தில் சன்டைகள் ஏற்படும் போது சிறுவர்கள் மனநிலை பாதிப்படைந்து சமூகத்தின் சவால்களுக்கும், போட்டிகளுக்கும் முகம்கொடுக்கும் மனப்பாங்கை இழந்து எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தினை இல்லாதொழிக்க மதுபாவனை வழிசமைக்கிறது.
தேர்தல் காலங்களில் மதுபாவனையை ஊக்கப்படுத்தும் வகையில் மதுபானங்களை வழங்கும் அரசியல் கலாசாரத்தினாலும், வியாபார நோக்கில் மதுபானசாலைகளை நடத்தும் அரசியல்வாதிகளிடத்திலும் சமூக உணர்வுடன் மாற்றம் ஏற்படுதல் அவசியம்.
மதுபாவனையைத் தடுப்பதற்கு சட்டத்தை கடுமையாக்கவேண்டுமென்பதோடு சமூக சிந்தனையோடு தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் மனப்பாங்கும் ஒவ்வொருவரிடத்திலும் உருவாகவேண்டும். அதேபோல பண்பாட்டு நிகழ்ச்சிகளான வீதி நாடகங்களையும், விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதன் ஊடாக உளரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி மதுபாவனையாளர்களைக் கட்டுப்படுத்த முனைவோம் என்று தெரிவித்தார்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்