இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் துணைவியார் உள்ளிட்ட ஐந்து போராளிகளின் உறவினர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
58வது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இருப்பதாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில இன்று 58வது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள நிலையில்ஆட்கொணர்வு மனுதாரர்கள் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி க.ரத்னவேல் முன்னிலையாகி குறுக்கு விசரணைகளை மேற்கொண்டார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் இருப்பதாகத்தான் முன்னர் தான் நீதிமன்றில் தெரிவித்ததாகவும் இன்றும் அவ்வாறே தெரிவிப்பதாகவும் சட்டத்தரணியின் விசாரணைக்கு பதிலளித்த 58வது படைப்பிரிவின் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது 58வது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜென்ரல் சானக்க குணவர்த்தன ஏற்கனவே கூறிய கருத்திற்கும், தற்பொழுது கூறும் கருத்துகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்டநீதிமன்ற நீதவான் அறிவித்துள்ளார்.