பல்கலைகழகமாக மாறும் வவுனியா வளாகம்

820

யாழப்பாணம், பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன் 22.09.2016 இல் பாராளுமன்றத்தில் பல்கலைகழக திருத்தச் சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கரியெல்ல அவர்களினால் அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

1990களில் அதிகரித்துவந்த உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாகாணங்கள் தோறும் 09 இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, வட மாகாண இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி 1991இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், அரசினால் சில இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு, 1996இல் ரஜரட்ட, சப்ரகமுவ,தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களும் 1997இல் வயம்ப பல்கலைக்கழகமும் தேசிய பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. 1997இல் வவுனியா மற்றும் திருகோணமலை இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரிகள் வளாகங்களாகத் தரமுயர்த்தப்பட்டு, இன்றுவரை யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த வளாகங்களாகவே இயங்கி வருகின்றன.

எனினும், 1997இலிருந்து வவுனியா வளாக மாணவர்கள், ஊழியர்கள், வளாக நலன் விரும்பிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தொடர்ச்சியாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் உயர்கல்வி அமைச்சிடமும் மேதகு ஜனாதிபதி அவர்களிடமும் வவுனியா வளாகத்தைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தக் கோரி, சாத்வீகமான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றார்கள். அப்போதெல்லாம், அவர்களது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழிகள் வழங்கப்பட்டும் வந்துள்ளன. எனினும், துரதிருஷ்டமாக அவை எவையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனினும், கெளரவ உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு அவர்கள், வவுனியா வளாகப் புதிய மாணவர் விடுதியினை 22.11.2015அன்று வளாக நிரந்தர அமைவிடமான பம்பைமடுவில் திறந்துவைத்து உரையாற்றும்போது, வவுனியா வளாகத்தினைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தவேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையினைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது தொடர்பான செயல்திட்ட யோசனையை முன்வைக்குமாறும் அதனைத் தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தான் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து செயல்திட்ட யோசனை தயாரித்தல் தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வன்னித் தேர்தல் மாவட்டமானது வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளதுடன், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட சனத்தொகைப் பரம்பலையும் கொண்டுள்ளது. வன்னி மாவட்டமானது, 30 வருடங்களாக யுத்தம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வந்தாலும், இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளான நிலைமையில் இருப்பதால், தற்போது சகல வளங்களிலும் மீளமைப்பு, புனரமைப்பு, புனர்வாழ்வு என பல்வேறு நடவடிக்கைகளின் தேவைகள் அங்கு அவசியமாகும்.

மனிதவள மேம்பாடு என்பது மிகவும் கவனிக்கப்படவும் வலியுறுத்தப்படவும் வேண்டியதொன்றாகவே கணிக்கப்படுகின்றது. இத்தகைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழகமொன்றின் தேவை அதிகம் உணரப்படுகிறது. பல்கலைக்கழகமொன்றினூடாக மனிதவள அபிவிருத்தியும் பிரதேச அபிவிருத்தியும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்க முடியுமாதலால், வவுனியா வளாகத்தை முழுமை பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக உடனடியாகத் தரமுயர்த்த  வேண்டுமென்று வலியுறுத்துகின்றேன். மேலும், வவுனியா வளாகத்தின் நிரந்தர அமைவிடமான பம்மைமடுவில் செயலாற்றுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள 160 ஏக்கர் காணியில் தேவையான பெளதிக மற்றும் ஆளணி வளங்கள் கடந்த 30 வருட கால போர் சூழ்நிலைகளால் வளர்ச்சியடைய முடியாத நிலையிலுள்ளன. அவற்றுக்கான துரித நடவடிக்கைத் திட்டங்கள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, பெளதிக வளங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான நிதி வசதிகளை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றேன். இதுதொடர்பாக கெளரவ உயர் கல்வி அமைச்சர், கெளரவ உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்று  இவ்வுயரிய சபையில் கேட்டுக்கொள்கின்றேன்.

வவுனியா வளாகத்திற்கு அவசியமான பெளதிக வளங்களை ஏற்படுத்துவதற்காக 2014ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பின்வரும் செயற்றிட்ட முன்மொழிவுகள் தேசிய திட்டமிடல் சபையால் திறைசேரிக்குப் பரிந்துரைக்கப்பட்டபோதும் இன்றுவரை நிதி ஒதுக்கீடுகள் அரச நிதியிலிருந்து ஒதுக்கப்படவில்லை. இரு மாடிகள் கொண்ட கட்டிடத்தொகுதிக்கான மதிப்பீடு 333 மில்லியன் ரூபாய்; 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய மண்டபம்198 மில்லியன் ரூபாய்;  மூன்று மாடிகள் கொண்ட நூலகக் கட்டிடத் தொகுதி 250 மில்லியன் ரூபாய்; மூன்று மாடிகள் கொண்ட ஊழியர்கள் தங்குமிட கட்டிடத்தொகுதி 178 மில்லியன் ரூபாய்; மூன்று மாடிகள் கொண்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கட்டிடத் தொகுதி 167 மில்லியன் ரூபாய் என்றவாறு அப்போதைய முன்மொழிவுகள் காணப்பட்டன.

தற்போது பிரயோக விஞ்ஞானம் மற்றும் வியாபாரக் கற்கைகள் ஆகிய இரண்டு பீடங்களினாலும் நடத்தப்பட்டு வரும் 8 பட்டப்படிப்பு பாடநெறிகளில் சுமார் 800 உள்ளக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். வவுனியா வளாகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மொத்தம் 154 பேர் கடமையாற்றி வருகின்றனர். புதிய கல்வியாண்டு 2015/16 முதல் வவுனியா வளாகத்தில் தொழில்நுட்பப் பாடங்களின்கீழ் புதிய பட்டப்படிப்பு பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதன்மூலம் மூன்றாவது புதிய தொழில்நுட்பப் பீடத்தினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.வியாபாரக் கற்கைகள் பீடத்திற்காக புதிய கட்டிடத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்காக 895 மில்லியன் ரூபாய்க்கான செயற்றிட்ட முன்மொழிவொன்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக உயர் கல்வி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகப் பிரதேசங்களை நகரமயமாக்கல் மூலம் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான நல்லுறவை வளர்ப்பதனூடாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்றிட்ட முன்மொழிவுகள் வவுனியா வளாகத்தினால் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பல்வேறு சிறிய மற்றும் நடுத்தர செயற்றிட்ட முன்மொழிவுகளினூடாக4,500 மில்லியன் ரூபாய் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட பூர்த்தியை இவ்வருடம் நவம்பர் மாதம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்ற அதேவேளையில், மனிதவள மற்றும் பெளதிக வளங்களின் பற்றாக்குறை காரணமாக உயர் கல்வி நிறுவகம் எனும் அந்தஸ்தினைப் பேணிவருவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உலகமயமாக்கல் மற்றும் பல்வேறு துறைகளினதும் துரித அபிவிருத்தி வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் வன்னி மாவட்ட மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவுமென வவுனியா வளாகத்தினைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்த வேண்மென வலியுறுத்துகின்றேன். வவுனியா வளாகம் 25ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வருடத்தில் அதனை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதன்மூலம் வன்னி மாவட்ட மக்களின் நீண்டகால அபிலாசைகளைப் பூர்த்திசெய்து, நல்லாட்சி அரசாங்கத்தின் அதிகாரப் பரவலாக்கலின் நன்மையை வன்னி மாவட்ட மூவின மக்களும் பெற்றுக்கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

கெளரவ அமைச்சர் அவர்களே, நீண்டகாலமாக மூவின மக்களும் வாழ்கின்ற எங்களுடைய மாவட்டத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் கவனத்தில் எடுத்து இதனை வன்னிப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்துவதற்கு தேவையான சகல நிதி ஆதாரங்களையும் ஏனைய விடயங்களையும் செய்து தரும்படி அங்கு பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் சார்பாக உங்களிடம்  கோரிக்கை விடுக்கின்றேன்.

unnamed-4

SHARE