அஸ்வின்…!
2015 நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு எட்டிய சமயத்தில் அறிமுகமானான். யாழ். தினக்குரலில் வெளியான ‘பயோடேட்டா’ பகுதிக்காக தமிழ் அரசியல் தலைவர்களின் படங்களை வரைய அப்போது அலுவலகம் வந்திருந்தான்.
எவருடனும் பேசாது அமைதியாக கணனியில் மணித்தியாலங்களை செலவழித்து அவன் கார்ட்டூன் வரைவதைப் பார்க்க நமக்குப் பொறுமை பறக்கும். ஆனால் சற்றும் கவனம் சிதறாமல் அவன் காத்த பொறுமைதான் அவன் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
ஒரு கார்ட்டூனுக்காக பல மணி நேரங்களை செலவிடுவான். அவனிடம் இருக்கும் ஆழமான தமிழ்த் தேசிய உணர்வு சில கார்ட்டூன்களை பத்திரிகை தர்மத்தை மீறுவனவாக அமைந்துவிடும். அதனால் அவை மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் அல்லது பிரசுரமாகாது போய்விடும்.
முதல் பக்கத்தில் விளம்பரங்கள் அதிகரித்தாலும் கார்ட்டூன் பிரசுரமாவது தாமதமாகிவிடும். இவ்வாறான நாள்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மன வெளிப்பாடுகளை என்னிடம் வெளிப்படுத்துவது வழமை. அப்போது அவனின் தமிழ்த் தேசியம் மீதான மக்கள் மீதான நலன் கண்டு வியந்திருக்கிறேன்.
ஈழத்தமிழர்களிடையே கார்ட்டூன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவன், இன்று ஐரோப்பிய கனவுகளுடன் வாழும் ஈழத்தமிழர்களிடம் தனது மரணத்தின் மூலமும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுள்ளான்.