வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக சிறீலங்காவிலிருக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தென்னிலங்கையில் உள்ள இனவாதக் குழுக்களின் தேவைக்கேற்றவாறு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனின் இந்த நடவடிக்கையானது தென்னிலங்கையிலுள்ள இனவாதிகளுக்கு தீனிபோடுவதாக அமைந்துள்ளது. இதனை அரசாங்கம் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக்காட்டவுள்ளது என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர், புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில், வட மாகாண முதலமைச்சரின் இந்த அடிப்படைவாத சிந்தனையுடன் கூடிய அறிவிப்புக்கள், நாட்டில் பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது தொடர்பிலும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.