மலையகத்தில் இதுவரை இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு பதிலாக தலா 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ‘சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அமைக்க மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியுடன் அமைச்சர் பி.திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
லிந்துலை லெமிலியார் தோட்டத்தில் மேற்படி சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மு ட்ரஸ்ட் நிறுவனத்தின் பிரதம இயக்குனர் லால் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் மேலும் பேசுகையில், மலையகத்தில் ஆரம்ப காலங்களில் பிள்ளைகளை பராமரிக்க பிள்ளை மடுவங்கள் இருந்தன. பின்னர் அவை பிள்ளைக் காம்பிராக்கள் என்று அழைக்கப்பட்டன. தொடர்ந்து சிறுவர் காப்பகங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என பல பெயர்களில் அழைக்கப்பட்டன. இன்று சகல நவீன வசதிகளுடன் கூடிய ‘சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள்’ அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிலையமும் தலா 70 இலட்ச ரூபா செலவில் 40 பேர்ச் காணியில் அமைய உள்ளன.
இவ்வாறு அமைக்கப்படும் புதிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகள் உறங்குவதற்கும், விளையாடுவதாகும், உணவு உண்பதற்கும், தாய்மார் அமர்ந்து பாலூட்டவும், கலந்துரையாடவும் தனித்தனியாக அறைகள் அமையவுள்ளன. அத்தோடு இந்த நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வெளி அமைக்கப்பட்டு சிறுவர் பூங்காவும் அமைக்கப்படவுள்ளது. இவை தவிர இந்த நிலையத்தில் பாலர் பாடசாலையும், நவீன குடிநீர் வசதி மற்றும் மலசல கூடங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. எனவே, சிறுவர்களாக இருக்கும் போதே முன்பள்ளிக் கல்வியையும் பெற்றுக்கொள்ள வசதி கிடைத்துள்ளது.
மேலும், முன்னர் எந்தவிதமான பயிற்சியும், கல்வியறிவும் இல்லாத ஆயாமார்கள் தான் சிறுவர்களைக் கவனித்து வந்தார்கள். ஆனால், இன்று நிலைமை அவ்வாறு அல்ல. அனைத்து நிலையங்களிலும் கல்வி கற்ற, பயிற்சி பெற்ற யுவதிகள் ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டு பிள்ளைகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.
எமது பிள்ளைகள் பழைய முறைப்படி சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேர்க்கப்படும் போது, அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் இல்லாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் திகாம்பரம் அரசாங்கத்தின் கவனத்துக்குக்கொண்டு வந்ததைத் தொடர்ந்தே நவீன வசதிகளுடன் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனிதனின் வாழ்க்கையில் இளம்பராயம் என்பது முக்கியமான பருவம் ஆகும். இந்தப் பருவம் ஆரோக்கியம் உடையதாக இருந்தால் தான் பிள்ளைகளின் எதிர்காலம் ஆரோக்கியம் உள்ளதாக அமையும். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையம் இன்னும் மூன்று மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பெப்ரவரி மாதத்தில் அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்பதற்காக நவீன வசதிகளுடன் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களையும், மக்கள் வசதியோடு வாழவேண்டும் என்பதற்காக தனி வீட்டுத்திட்டத்தையும் அமைச்சர் அமுல்படுத்தி வருகின்றார். அவருக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அளித்ததன் பயனை இப்போது மலையக மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள். இன்னும் நான்கு வருடங்களில் அமைச்சரின் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் வெற்றிகரமான முறையில் நிச்சயம் நிறைவேறும். எனவே, மலையக மக்கள் தமக்கு சேவை செய்யக் கூடியவர்களையே எதிர்காலத்தில் தெரிவு செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
தகவலும் படங்களும் :- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்