இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 3வது சீசன் போட்டி கவுகாத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அரங்கத்தில் நேற்று மாலை தொடக்க விழா கோலாகலமாக அரங்கேறியது. விழாவையொட்டி அரங்கம் மின்னொளியில் ஜொலித்தது.
இந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் அலியாபாத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் வருண் தவான் ஆகியோருடன் சுமார் 500 நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
மேலும், இந்த தொடரில் பங்கேற்கும் அணியின் உரிமையாளர்களான சச்சின் (கேரளா), டோனி (சென்னை), நடிகர்கள் அபிஷேக்பச்சன் (சென்னை), ஜான் ஆபிரகாம் (கவுகாத்தி), ரன்பீர் கபூர் (மும்பை) ஆகியோர் மேடையில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் போட்டிக்கான கால்பந்தை ஐ.எஸ்.எல் சேர்மன் நீதா அம்பானியிடம் வழங்கினார்.
டிசம்பர் 18ம் திகதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, கொல்கத்தா, கோவா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)– கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் கவுகாத்தி 1-0 என்ற கோல் கணக்கில் சச்சினை உரிமையாளராக கொண்ட கேரளாவை வீழ்த்தியது.
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டீ கொல்கத்தாவை சந்திக்கிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.